Friday 25 December 2015

சக்தி என்ற சகாயம் ஐ.ஏ.எஸ்

எல்லோருக்கும் அக்கா, அண்ணா, எப்படி இருப்பாங்க என்ன மாதிரி நடந்துக்குவாங்கன்னு தெரியலை..

அடுத்த பதிவும் அவளைப்பற்றியது தான் என்பதால் இதஅவளைப்பற்றி...ஒரு சில வார்த்தைகளில்...

எனக்கு இவள் தான் இரண்டாம் தாய் என்றால், அது அப்படியே உண்மை. பள்ளியில் உணவு இடைவேளையில் வந்து பார்ப்பாள்.

என் ஆடைகளுக்கு பொருத்தமாக இவள் தான் அணிகலன்கள் தேர்ந்தெடுப்பாள்.  

காய்ச்சல் வந்தால் பெரும்பான்மையான நேரங்களில் மாத்திரை கொடுப்பதும் இவளே

பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இவள் தான் எனக்கு டியூஷன் டீச்சர்.

பள்ளியில் இவள் தங்கை என்றே நான் அடையாளப்படுத்தப்படுவேன்.(.இவள் மாணவர்கள் தலைவர்)  எங்கள் ஃபாதருக்கு(பள்ளி முதல்வர்)  மிகவும் பிடித்தமான மாணவி.

வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இவள் புகழ் பாடுவதில் வல்லவர்கள்..(எல்லோருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணியிருப்பாளோ என்ற சந்தேகம் இன்னும் உண்டு.)

இவள் தங்கை எனப்பட்டதால் அவளைப் போலவே நானும் நிறைய மதிப்பெண்கள் வாங்குவேன் என்று, சேட்டையே செய்யமாட்டேன் என்றும், பாடத்தில் கருமமே கண்ணாயிருப்பேன் என்றும் அவர்களாகவே கணக்குப் போட்டுக் கொண்டார்கள். பாவம்.  ( இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் படித்து, அப்புறம் நல்ல பிள்ளை போல நடித்து...அடடா..)( நல்ல பெயர் வாங்கிட்டோம்ல)                                                                                                                                                    

* காய்ச்சல் வந்தால் அம்மா கஷாயம் போட்டுத் தந்தால் , அம்மா சொல்படி கேட்டு அப்படியே அந்தக் கண்றாவியை..அய்யோ டங்கு சிலிப் ஆய்டுச்சு..அந்த கஷாயத்தைக் குடிப்பவள்

* இத்தனைக்கு மணிக்குத் தூங்கு என்று அம்மா சொல்லிப் போனால் அந்தக் கடிகாரத்தின் முள் கூட சற்று மாறுபடும். இவள் வாக்குத் தவறாதவள்..அந்த அளவுக்கு நாணயஸ்த்தி.

*அதே போல் பல் விளக்கி விட்டே காப்பி குடிக்கும் பழக்கத்தையும், குளித்து விட்டே சாப்பிடும் பழக்கத்தையும் அநியாயமாய் கடைபிடிப்பவள்.( நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் வாதிடுபவள்..)



*சரியான அம்மாகோண்டு...அப்பாவே தப்பித் தவறி ஹோட்டலுக்குக் கூட்டிப் போனாலும், டிஃபன் ஆர்டர் கொடுக்கச் சொன்னால், ஏதாவது கோபி மஞ்சூரியன், கைமா புரோட்டோ என்று அவள் நாக்கு கேட்டாலும் அம்மாவைத் தான் பார்ப்பாள்..( நான் இது போன்ற சமயங்களில் அம்மா முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்து விடுவேன்) ( அவளுக்கு அப்படி ஒரு பயம் என்றால் எனக்கு இப்படி ஒரு பயம்..இதுவும் பயம் வகையில சேத்துக்கலாம் தப்பில்லை..
இதனை இத்தோடு விட்டு விடுகிறேன்..

ஒருநாள் ஏதோ ஒரு வகையில் ஒரு வாக்கு வாதம் ஏற்பட, வகையாக அவளிடம் மாட்டிக் கொண்டேன்..

தொல் பொருள் ஆய்வாளர்கள் அவள் தலைமையின் கீழ் இயங்கினால் மிகச் சரியாகவும் , நேர்த்தியாகவும் , செயல்படலாம் என்ற அளவுக்கு, நான் முன்னால் செய்த தப்பு, அதற்கு முன்னால் செய்தது என்று அனைத்தையும் சொல்லுவாள்..(இவளை விட்டால் நான் அம்மாவுக்குள் இருக்கும் போது ஏதாவது செய்திருந்தால் அதனையும் கூடச் சொல்லக்கூடும்)

நான் என்ன செய்திருப்பேன்..தேர்வு நேரங்களில் கதை புத்தகங்கள் படித்திருப்பேன். கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவேன்..

அம்மாவிடம் எளிதாக சாதித்து விடலாம் என்றால், இவளிடம் அனுமதி வாங்குவதற்குள் எனக்கு நாலு டின் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும்..(ஆனால் அம்மா எப்பவும் சக்தியிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய் நு சொல்லும் போது, அய்யய்யோ...அவள் எல்லாத்தையும் துருவி துருவி கேட்பாளே..ஆனா பாருங்க..அவ படிக்கும் போது எந்த விஷயம் கேட்டாலும் ஓகே ஆயிடும்..ஏன்னா மேடம் படிப்புல சின்சியர்..அதனால அந்த நேரத்தை வீணாக்க மாட்டாங்க...நான் பல நாளா இப்படித்தான் அவளைக் கரெக்ட் பண்ணி..கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுறது. மாடில உலவுறது,கதை புத்தகம் படிக்கிறது இப்படி பற்பல விஷயங்கள் செய்துகிட்டு இருக்கேன்..) ( இதைப்படிப்பவர்கள் இந்த உண்மையை அவளிடம் சொல்லிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்..)

ஆனால் இவள் அதைக் கூட அம்மாவிடம் அனுமதி கேட்டு அங்கிருந்து ஒப்புதல் வந்த பிறகே செய்யும் பழக்கம் கொண்டவள்.அதுவும் இல்லாமல் தேர்வு நேரத்தில் பாடத்தைத் தவிர ஒன்றும் படிக்க மாட்டாள்...அவள் வகுப்பில் இவள் ஒரு மார்க் குறைந்தால் கூட குய்யோ முறையோ என்று நான் எப்படி? எப்படீ இப்படி ஆச்சு என்று 98 மார்க் வாங்கும் போதும் புலம்புவாள்..

இன்று கல்லூரி வைத்த தேர்வில்(கல்லூரி அளவில்) முதல் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். இவள் ஆசை , லட்சியம், எல்லாம் ஒரு பெரிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது தான். நிச்சயம் ஆவாள். அவள் ஆசையில் எனக்கும் பங்கு உண்டு.

அவளை வாழ்த்தவே இந்தப்பதிவு. காய்ச்சலோடும் கவனமாக படிக்கும் அவளை வாழ்த்துங்களேன்..

6 comments:

  1. அட..சூஜ்..ம்..சேட்டக்காரி..

    ReplyDelete
  2. சக்தி நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆவார்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ( இதைப்படிப்பவர்கள் இந்த உண்மையை அவளிடம் சொல்லிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் கண்டிப்பாக சொல்ல மாட்டேன்)
    சக்தி ஐ.ஏ.எஸ் ஆக எமது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்! என்னையும் என் தங்கையையும் பார்த்து எழுதிவிட்டாயோ என்று ஆங்காங்கே எனக்கு சந்தேகம் வந்தது. இடைவேளையில் சென்று பார்ப்பது துவங்கி, ஒரு மார்க்கிற்கு குய்யோ முறையோ என்பது வரை!! :)
    கிரேஸ் தங்கை என்ற அடைமொழி தான் என் சகோதரிகளுக்கும் பிடிக்காமல் இருந்தது.

    சக்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! சக்திகிட்ட நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்..மூச்! ஆனால் உன் வலைப்பக்கத்தைத் தவறாமல் படிக்கச் சொல்ல வேண்டும் ஹஹாஹா

    ReplyDelete
    Replies
    1. இன்னொன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். இதே தொடர்பை என் இரு மகன்களிடையேயும் பார்க்கிறேன். மூத்தவன் சக்தியைப் போல் நாணயஸ்தன், இளையவன் குறும்பு :)

      Delete
  5. எழுத்து நடையை ரசித்தேன்மா

    ReplyDelete